Bookstruck

பிறர் பொருள்

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை பிராமணன் வசித்து வந்தான். அவன் தினமும் நான்கு வீடுகளுக்குச் சென்று பஞ்சாங்கம் வாசித்து அந்த நாளின் சிறப்பம்சங்களைக் கூறுவான். அவனுடைய புரவலர்களிடமிருந்து கிடைத்ததை வைத்து அவன் வாழ்ந்தான். பிராமணனின் வறுமை பற்றிய கதை ராஜாவிற்குத் தெரிந்ததும், அவருக்கு உதவ முடிவு செய்தார். அதற்காக ராஜா அந்த பிராமணனை வேண்டுமென்றே அரண்மனைக்கு வரவழைத்தார். பிராமணன் அரண்மனைக்குச் சென்று அந்த நாளின் திதி, நட்சத்திரம், சுபம்-அசுபம், செய்ய வேண்டியது-செய்யக் கூடாதது போன்ற விஷயங்களைச் சொன்னான். ராஜா சந்தோஷமடைந்து அந்த பிராமணனுக்கு ஒரு பூசணிக்காயை பரிசாகக் கொடுத்தான். பிராமணன் அந்த பூசணிக்காயை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். வழியில் அவனுக்குத் தெரிந்த இன்னொரு பிராமணனின் வீட்டின் முன் நின்று, "ஐயா, எனக்கு இந்தப் பூசணிக்காய் கிடைத்தது! எங்கள் வீட்டில் யாரும் பூசணிக்காய் சாப்பிட மாட்டார்கள், அதனால் நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்." என்று சொல்லி ஏழை பிராமணன் அந்த பூசணிக்காயை அந்த பிராமணனுக்குக் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பினான். பிறகு மற்றொரு பிராமணனின் மனைவி அந்தப் பூசணிக்காயை உடைத்தாள், அதிலிருந்து தங்க உருண்டை ஒன்று கீழே விழுந்தது. அவள், "அட பாவமே! பூசணிக்காய் என்று நினைத்து பரிதாபமா இவரு கொடுத்துட்டாரு, ஆனால் இதுல தங்கம் இருக்கு. சீக்கிரம் போயி அவரோட பொருள அவர்ட்ட குடுங்க. பிறர் பொருளை வைத்திருப்பது அல்லது அனுபவிப்பது பெரும் பாவம்." என்றாள். ஆனால் அந்த பிராமணன் தன் மனைவியிடம், "நீ சொல்வது சரிதான், ஆனால் அந்த பிராமணனின் விதி வறுமை என்று எழுதப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இல்லையென்றால் தானாக வந்த செல்வத்தை அவர் வீட்டில் இப்படி விட்டிருக்க மாட்டார். வீட்டுக்கு வந்த லட்சுமியை வெளியே அனுப்புகிறவன் முட்டாள் ஆகிவிடுவான்" என்றான். மனைவி மீண்டும், "ஆனால் பிறர் பொருள் பாம்பைப் போன்றது, தொட்டால் எப்போது, எப்படி கடிக்கும் என்று சொல்ல முடியாது. நான் சொல்வதை கேளுங்கள்." என்று சொன்னாள். ஆனால் அந்த பேராசை பிடித்த பிராமணன் அவளைப் புறக்கணித்தான். மறுநாள் ஏழை பிராமணன் மீண்டும் பஞ்சாங்கம் சொல்ல ராஜாவின் வீட்டிற்கு வந்தான். அப்போது ராஜா அவரிடம், "என்ன குருஜி! நேற்று பூசணிக்காய் குழம்பு செய்து சாப்பிட்டீர்களா? எப்படி இருந்தது?" என்று கேட்டார். உண்மையைச் சொன்னால் ராஜா கோபப்படுவார் என்று பயந்து பிராமணன் சுத்தமாகப் பொய் சொன்னான். "ஆம் மகாராஜா! குழம்பு செய்திருந்தேன், அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது." என்றான். பிராமணன் அதில் தங்கம் கிடைத்ததைப் பற்றி எதுவும் பேசவில்லை. அந்த பிராமணன் அதைப் பற்றி எதுவும் பேசாததால், அந்த பிராமணனுக்கு அந்த செல்வம் கிடைக்கவில்லை, அதனால்தான் அவர் அந்த பூசணிக்காயை அப்படியே யாருக்காவது தானம் செய்திருக்க வேண்டும் என்று ராஜா நினைத்தார். எனவே ராஜா சொன்னார் - "நேற்று கொடுத்த பூசணிக்காய் சிறியது. இன்று இன்னும் பெரியதைக் கொடுக்கிறேன். அது எப்படி இருக்கிறது என்று நாளை சொல்லுங்கள்." என்று கூறி ராஜாவால் பிராமணனுக்கு இன்னும் ஒரு பெரிய பூசணிக்காய் (வெள்ளைப் பூசணி) கொடுக்கப்பட்டது. அந்த ஏழை பிராமணன் மறுபடியும் அதே ஆசை பிடித்த பிராமணனிடம் போய் அந்த வெள்ளைப் பூசணியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். பேராசை பிடித்த பிராமணனால் ஆசையை அடக்க முடியவில்லை. உடனே அந்த வெள்ளைப் பூசணியை தரையில் அடித்து உடைத்தான். ஆனால் அதிலிருந்து தங்கம் பதிலாக உயிருள்ள பாம்பு வந்தது, பிராமணனைக் கடிக்கச் சீறியது. பயத்தில் பிராமணன் அலறினான், "அடி, இது பாம்பு! கடிக்க வருது, இதைக் கொல்லணும்." அப்போது அவரது மனைவி சொன்னாள், "பிறர் பொருள் பாம்பைப் போன்றது என்று நான் நேற்றே உங்களிடம் சொன்னேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை." என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண் ஓடி அந்த ஏழை பிராமணனின் வீட்டிற்குச் சென்று, "அண்ணா! சீக்கிரம் எங்கள் வீட்டிற்கு வந்து உங்க தங்கத்தை எடுத்துட்டு எங்க கணவரை காப்பாத்துங்க! அவர் பின்னாடி பாம்பு துரத்துது, உங்க காலில் விழுகிறேன்!" என்று கெஞ்சினாள். அந்த பரிதாபகரமான ஏழை பிராமணனுக்கு 'தங்கம் என்றால் என்ன', 'பாம்பு என்றால் என்ன' என்று எதுவும் புரியவில்லை. குழப்பத்துடன் அவள் திரும்பிப் பார்த்தான். அவள் கையைப் பிடித்து இழுத்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அப்போது அங்கு நிறைய பேர் கூடி இருந்தார்கள். ஆசை பிடித்த பிராமணன் நடுங்கியபடி நடந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தான். கூட்டத்தைப் பார்த்ததும் பாம்பு எங்கோ ஓடிவிட்டது. ஏழை பிராமணனைப் பார்த்ததும் ஆசை பிடித்த பிராமணன் சொன்னான், "நான் நேத்து உன்னோட தங்கத்த மறைச்சிட்டேன், அதனாலதான் இன்னைக்கு பாம்பு என்ன துரத்துச்சு. ஆனா கடவுள் கிருபையினால அது போச்சு. நீ உன்னோட தங்கத்த எடுத்துட்டுப் போ!" பஞ்சாங்கம் சொல்பவனைப் பின்பற்றி ராஜா தனது வீரர்களை அனுப்பி இருந்தார். அவர்கள் பாம்பைத் தேடிக் கொன்று நடந்த அனைத்தையும் ராஜாவிடம் சொன்னார்கள். ஏழைக்கு உதவுவதற்காகவே ராஜா இந்த ஏற்பாடு செய்தார். கதையின் முடிவு இனிமையாக இருந்ததைப் பார்த்த ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.